நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வு தொடர்பாக நடந்துவரும் சர்ச்சைகள், சமத்துவத்துக்கு எதிரான அதன் தன்மையை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மேலும் பலவாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களுக்கான வாய்ப்புகளுக்கு ‘நீட்’ தடை போடுகிறது.

‘தேசிய தேர்வு முகமை மேல் தவறு இல்லை’ என மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறினாலும், நடந்துவரும் நிகழ்வுகள் அதற்கு மாறான சித்திரத்தையே அளிக்கின்றன. தேர்வுகண்காணிப்பாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டது, அதற்கு ஆதாரமாக பல கோடி ரூபாய் காசோலைகள், தொகை குறிப்பிடாத காசோலைகள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட புகார்கள் மீது குஜராத் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இந்த சதிச்செயலில் பள்ளி முதல்வர், இயற்பியல் ஆசிரியர், பல நீட் பயிற்சி மையங்களும் கூட்டு சேர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு, அமைப்பு ரீதியாகவே மாற்றம் தேவைப்படுவதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

நீட் ஒழிப்பு போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள், இத்தேர்வால் பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இனியும் பொறுக்கலாகாது. தகுதிக்கான அளவுகோல் என பொய்வேடம் தரித்த நீட்தேர்வு, சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி பாதிக்கிற ஒரு மோசடிஎன்பது திரும்ப திரும்ப நிரூபணம் ஆகிவிட்டது. மாணவர்கள், ஏழைகள், சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசுஇத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE