30 ஆண்டுகளுக்கான ஒப்பந்த தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது: எஸ்ஆர்எம் ஹோட்டல் நிர்வாகம் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1996-ம் ஆண்டு எஸ்ஆர்எம் நிறுவனம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது வரையிலான வாடகைத் தொகையை எஸ்ஆர்எம் குழுமம் முழுமையாக செலுத்தியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உயர்வுத் தொகையும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடாத அதிக தொகையை செலுத்துமாறு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வற்புறுத்தியது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2017-ல் ஜிஎஸ்டி வரிமுறை அறிமுகப் படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில், 2003-ம் ஆண்டு முதல்வரித் தொகையை கணக்கிட்டு, எஸ்ஆர்எம் ஹோட்டல் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 2021 முதல் 2024 வரையிலான பாக்கித் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி, ரூ.12 கோடி செலுத்துமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த 4-ம் தேதி எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு கடிதம் அனுப்பியது. இது எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடாத ஒன்றாகும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஊடகங்களில் அளித்துவரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. குத்தகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதுகுறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது சரியானது அல்ல என்று எஸ்ஆர்எம் ஹோட்டல் சார்பாக தெரிவிக்கிறோம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE