நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக டிஜிபி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் கிளை உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த மாடசாமி, தாளமுத்து நகர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

ரவுடி பட்டியல் பராமரிப்பு, பெயர் நீக்கம் தொடர்பாக மாவட்டம்தோறும் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். ரவுடி பட்டியல் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை நிறைவேற்றாத டிஜிபி சங்கர் ஜிவால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மாடசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சேஷசாயி விசாரித்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE