எஸ்சி, எஸ்டி மேம்பாட்டுக்கான செயல்திட்ட சட்டம்: ஆளுநர் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியீடு

By கி.கணேஷ்

சென்னை: பட்டியல் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான செயல்திட்ட சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்டியல், பழங்குடியினருக்கான மேம்பாட்டுசெயல் திட்டம் தயாரித்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக புதிதாக சட்டம் உருவாக்குவதற்கான மசோதாவை ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தார். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் தமிழகம் முழுமைக்கும் பொருந்தும்.

இச்சட்டப்படி, பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான மே்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த மாநில அளவில் முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நிதி, வனத்துறை மற்றும் பட்டியல், பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசால் நியமிக்கப்படும் 5 சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், தலைமைச்செயலர், நிதி, திட்டம் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறை, வனத்துறை, பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர்கள் உள்ளிட்டோர் உறுப்பிரனர்களாக இருப்பர்.இக்குழு ஆண்டுக்கு ஒருமுறை கூடி, மேம்பாட்டு செயல்திட்டம் தொடர்பான கொள்கைகள் மீது அரசுக்கு ஆலோசனை வழங்கும். அத்துடன், அதிகாரமளித்தல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மேம்பாட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்.

இக்குழுவின் கீழ், அதிகாரமளித்தல் குழுவானது ஆதிதிராவிடர், நலத்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்படும். இக்குழுவில் தலைமைச்செயலர் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் உறுப்பினர்களாக இருப்பர். அதிகாரமளித்தல் குழு ஆண்டுக்கு 3 முறை கூடும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டங்களை உருவாக்குவது, ஏற்கெனவே உள்ள திட்டங்களை கண்காணிப்பது, தரவுகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, மேம்பாட்டு செயல்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தும் முகமைத் துறையாக இருக்கும். மேம்பாட்டு செயல் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்கும். இதுதவிர, மாவட்ட அளவில் திட்டங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுவும் உருவாக்கப்படும்.

ஆட்சியர் தவிர்த்து, பட்டியல், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 5-க்கும் மிகாத சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வன அலுவலர், வேளாண் இணை இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்து, முன்னேற்ற அறிக்கை அளிக்கும். இச்சட்டப்படி பட்டியல், பழங்குடியினருக்கு மட்டுமே பயனளிக்கும் சிறப்பு திட்டங்களுக்கான தொகையின் 100 சதவீதத்தையும் அத்திட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி வகுக்கப்படும் விதி அல்லது அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்படும் உத்தரவு என ஒவ்வொன்றும் அது வகுக்கப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட பின், அடுத்து கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் வைக்கப்படுதல் வேண்டும், என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE