சென்னை: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 16 முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர்மாவட்டம் ஆவடியில் 6 செ.மீ., சென்னை மணலி, திரு.வி.க.நகர் ஆகிய இடங்களில் தலா5 செ.மீ., ராயபுரம், புழல், அண்ணாநகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், சென்னை வானகரம், மாதவரம், வில்லிவாக்கம், சென்னை ஆட்சியர் அலுவலகம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கொளத்தூர், அயனாவரம், திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை மணிக்கு 35 முதல்45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.