வருவாய் கிராமங்கள் வாரியாக சொத்து மதிப்புக்கான வரைவு வழிகாட்டி பதிவேடு வெளியீடு @ கோவை

By இல.ராஜகோபால்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக சொத்து மதிப்புக்கான வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டப் பிரிவு 47AA-ன் கீழ் தமிழ்நாடு முத்திரை (சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன்படி மைய மதிப்பீட்டு குழு 2024 ஏப்ரல் 26-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டுக்கு இணங்க கோவை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக சொத்து மதிப்புக்கான வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE