விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? - கூட்டணியில் ஆலோசித்து முடிவு என அன்புமணி தகவல்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக கூட்டணியிலுள்ள பாமக போட்டியிடுவது குறித்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே. மணி, மாநில நிர்வாகிகளான வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கைச்சூர் ஆறுமுகம், பாமக முன்னாள் பொதுச்செயலாளர் தீரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா அருள்மொழி, பாமக முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில், பாமக வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்துக்கு பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது, "விக்கிரவாண்டி இடைதேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE