விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி: புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹைட்ரஜன் சல்பைட் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக புதுச்சேரி- விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் செவ்வாய்க்கிழமை கழிவறையில் ஹைட்ரஜன் சல்பைட் விஷவாயு வெளியாகி 3 பெண்கள் இறந்தனர். இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேதப் பரிசோதனை நடக்கிறது.

இதனிடையே முதல்வர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணிக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், "3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும்" என கோஷம் எழுப்பினர்.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. விழுப்புரத்திலிருந்து வந்த பேருந்துகள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பேருந்துகள் செல்ல முடியாமல் நின்றன. சுமார் அரைமணி நேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE