ஓட்டுநர் உரிமத்துக்கு சான்று வழங்கும் மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும்: போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: புதிய ஓட்டுநர் உரிமம் பெற, பழைய உரிமத்தை புதுப்பிக்க, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் மட்டுமே மருத்துவ சான்றிதழை அளிக்க முடியும் என்றும், அதற்காக சாரதி மென்பொருளில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து ஆணையர் அறி வுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மோட்டார் வாகன விதியின்படி 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ, பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ முடியும்.

தமிழகத்தின் ஒருசில இடங்களில் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ளநிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் போலி மருத்துவரிடம் சான்று பெறுவதை தடுக்கும்விதமாக, சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களதுகிளினிக் அல்லது மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒருமுறை பதிவேற்றம் செய்து,தங்கள் பெயரை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.இதனைத் தொடர்ந்து, தங்களதுஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடுசெய்ய வேண்டும். இதனை முடித்தபின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, சாரதிமென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றை பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.

மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்துதங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்டபின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்ய முடியும்.

எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழை மின்ணணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதிசெய்வது குறித்தும் இன்று காலை11 மணிக்கு மாநிலம் முழுவதும் அந்தந்த வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள்மூலம் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் பங்கேற்று தங்கள் பதிவுகளை இறுதிசெய்வது குறித்து மருத்துவர்கள்அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE