விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. திமுகவை சேர்ந்த இவர், மக்களவை தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி எம்எல்ஏ மறைவு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்தது. தொடர்ந்து, ஏப். 8-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வழக்கமாக, ஒரு மக்களவை அல்லது சட்டப்பேரவை தொகுதி காலியானால், அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. இறுதி கட்ட வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1-ம் தேதி நடைபெற்றது. இறுதி கட்ட தேர்தலின்போதே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு: இந்நிலையில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளின் தேர்தல் தொடர் பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, தேர்தல் தொடர்பான அறிவிக்கை வரும்ஜூன் 14-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு அன்று முதல் வேட்புமனு தாக்கல்தொடங்குகிறது. மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21-ம்தேதி. மனுக்கள் ஜூன் 24-ம் தேதி பரிசீலிக்கப்படும். போட்டியிட விரும்பாதவர்கள் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம்தேதி கடைசி நாள். அன்று மாலையேவேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியாகும்.

ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் ஜூலை 15-ம் தேதி நிறைவு பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று முதல் விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

திமுக போட்டி: இத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. மனுத் தாக்கலுக்கு குறைந்த காலமே இருப்பதால், விரைவில் திமுக தலைமை இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்: தமிழகத்தின் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகள், தற்போதைய உறுப்பினரின் மறைவு அல்லது ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ளன.

அந்த வகையில், ரூபாலி (பிஹார்), ராய்கஞ்ச், ரணகாட் தெற்கு, பாக்தா, மணிக்தலா (மேற்கு வங்கம்), விக்கிரவாண்டி (தமிழ்நாடு), அமர்வாரா (மத்திய பிரதேசம்), பத்ரிநாத், மங்களாவூர் (உத்தராகண்ட்), ஜலந்தர் மேற்கு (பஞ்சாப்), டேரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் (இமாச்சல பிரதேசம்) ஆகிய 13 தொகுதிகளுக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த தொகுதிகளில் தேர்தல்நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE