வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி மனு: ஜூன் 14-ல் உத்தரவு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது வரும் ஜூன் 14 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி அறிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தேதி குறிப்பிட்டு தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் ஆவணங்களை வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும், என்றும் கோரப்பட்டது.

மேலும், கடந்த 2012 முதல் 2022 வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விவரங்களை வழங்கக்கோரியும், கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் பணம் டிபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களை தெரிவிக்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் எம்.கவுதமன் ஆஜராகி, அமலாக்கத்துறை சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களி்ல் ஒரு சில ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது, என்றார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த சூழலில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 91-ன் படி ஆவணங்களைக் வழங்கக்கோரி தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல.

மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி மேகலாவின் வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்ட தொகையை முழுவதுமாக செலவு செய்துவிட்டு, தற்போது அதுபற்றி தங்களுக்கு தெரியாது எனக்கூறுவது ஏற்புடையதல்ல. இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சூழலி்ல் வேண்டுமென்றே செந்தில் பாலாஜி தரப்பு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனுக்களை தாக்கல் செய்து வருகிறது, என குற்றம் சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி, சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது வரும் ஜூன் 14 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும், என அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 14 அன்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE