FFவிருதுநகர்: விருதுநகர் அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 37 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து ஞாயிறு இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி வந்தது. கோவையைச் சேர்ந்த முருகபூபதி (36) என்பவர் பேருந்தை ஓட்டிவந்தார். திங்கள்கிழமை அதிகாலை விருதுநகர்- சாத்தூர் நான்குவழிச் சாலையில் வச்சக்காரப்பட்டி அருகே சென்றபோது, சாலையோரத்தில் உள்ள சிறிய பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதியது. இதில், முன்பக்க சக்கரங்கள் கழன்றதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் முருகபூபதி, பயணிகள் உள்பட 38 பேர் காயமடைந்தனர். பேருந்தில் வந்த கோவையைச் சேர்ந்த பிரபு (31), நாகராஜன் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த வச்சக்காரப்பட்டி போலீஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காமயமடைந்த 38 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சையிலிருந்த புவனேஸ்வரி சற்று நேரத்தில் உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் முருகபூபதி உள்ளிட்ட 37 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.