திருப்பூர் | குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு: ஒரு குழந்தை மீட்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ஒரு குழந்தை தொழிலாளி மீட்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் வகையில் வரும் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் புகழேந்தி ஆகியோர் தலைமையில், மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள், கட்டுமான பணி நடைபெறும் இடங்கள் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என நேற்று (வெள்ளிகிழமை) ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, ஒரு குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த அந்தக் குழந்தை தொழிலாளியை அதிகாரிகள் மீட்டனர். குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் எவ்வித தொழில்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துதல் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்துதல் குற்றம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதைமீறி குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமோ அல்லது அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE