சென்னை | மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக மின்விளக்கு அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29).இவர் சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்தார். இவரது மனைவி கீர்த்தி. இவர்களுக்கு 8மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கீர்த்திக்கு நேற்று முன்தினம் 25-வதுபிறந்தநாள் வந்தது.

திருமணமாகி மனைவிக்கு வரும் முதல்பிறந்தநாள் என்பதால், அந்தவிழாவை சிறப்பாகக் கொண்டாடவும், மறக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அகஸ்டின் பால் திட்டமிட்டார்.

இதற்காக நேற்று முன்தினம் மாலை வீடு முழுவதும் சீரியல் பல்ப் அமைத்து அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், மனைவி கண் எதிரேதூக்கி வீசப்பட்டு அகஸ்டின் பால் பலத்த காயம் அடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அகஸ்டின் பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அசோக் நகர்போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரித்தனர். மேலும்,அகஸ்டின்பால் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE