பொறியியல் படிப்புக்கு 2.49 லட்சம் பேர் விண்ணப்பம்: கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டம்

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்த நிலையில் அவர்களில் இதுவரை 1.78 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே மாணவ, மாணவியர் போட்டிபோட்டு விண்ணப்பித்து வந்தனர். ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கடைசி நாள் நேற்று (வியாழக்கிழமை) முடிவடைந்தது. இந்நிலையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இறுதி விவரங்களை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் இன்று (வெள்ளிக் கிழமை) வெளியிட்டார்.

அதன்படி, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 12-ம் தேதி வரை அவகாசம் உள்ளது.

கடந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 பேர் பதிவு செய்திருந்தனர். இறுதியாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை முழுமை செய்தவர்கள் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 பேர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு அதிகம் பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்வதற்கான இணையவழி கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE