இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சேத்துப்பட்டு ஸ்டெர்லிங் சாலை சுரங்கப்பாதை பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணி தீவிரமடைந்துள்ளது. இத்தடத்தில் சுரங்கப்பாதை பணியை வரும் செப்டம்பரில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது வழித்தடம் ஆகும். 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, 2.8 கி.மீ. தொலைவில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. தற்போது இப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தீவிரமடைந்துள்ளது. இந்த பணியில் 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. இங்கு 706 மீட்டர் தொலைவுக்கு இருவழிப்பாதை சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு வழியில் 564 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி மற்றொரு வழியில் 168 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியானது 22 மீட்டர் ஆழத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லிங் சாலை நோக்கி செல்லும்போது, ஆழம் சற்று குறையவாய்ப்பு உள்ளது. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடுத்த மாதம் மத்தியில் பணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கிறோம். மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் செப்டம்பரில் பணியை நிறைவு செய்யும்.

அதேபோல், ஸ்டெர்லிங் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பூமியில் இருந்து மண்ணை வெளியேற்றி, கட்டுமானப்பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE