சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கு: மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணையை, மீண்டும் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து மூன்றாவது நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார். அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரனும், சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யனும், இடையீட்டு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் ஆஜராகி வாதிட்டனர். காவல் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் ஒரு நீதிபதி தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார். மற்றொருவர் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதன்படி தற்போது தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அளித்துள்ள மாறுபட்ட தீர்ப்பை முழுமையான ஒன்றாக கருத முடியாது. ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தான் விசாரிக்க முடியும். குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதாக இருந்தால் அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க நிச்சயமாக அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் ஒருதலைபட்சமாகி விடும்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அதீத செல்வாக்கு மிக்க இரண்டு பேர் தன்னை அணுகியதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், நியாயமாக இந்த வழக்கை அவர் விசாரிக்காமல், விசாரணையில் இருந்தே விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து ரத்து செய்ய முடியாது. ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டுமென பொறுப்பு தலைமை நீதிபதியும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். எனவே இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்பதால், இந்த வழக்கை மீண்டும் மற்றொரு இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கிறேன்.

அந்த நீதிபதிகள் முன்பாக இந்த வழக்கை பதிவுத்துறை வரும் ஜூன் 12 அன்று விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இந்த வழக்கில் தமிழர் முன்னேற்றப்படை தலைவரான வீரலட்சுமி தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி அதை தள்ளுபடி செய்வதாக, நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE