கோவை மக்களவை தொகுதியில் அண்ணாமலை தோல்விக்கு காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

கோவை: மக்களவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, 2011-ல் ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானார். 2019-ல்பெங்களூருவில் காவல் துணைஆணையராக இருந்த அண்ணாமலை, பணியை ராஜினாமா செய்துவிட்டு, 2020-ல் பாஜகவில் சேர்ந்தார். சில மாதங்களிலேயே கட்சியின் துணை தலைவரான அவருக்கு, பின்னர் மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் இளங்கோவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தொடர்ந்து, ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை மூலம் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்தார் அண்ணாமலை. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியது, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கான தொடக்கமாக இருந்தது.

இந்நிலையில், பாஜகவுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ள கோவை தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியது. அங்கு திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் களம் கண்டனர்.

அண்ணாமலையை ஆதரித்துகோவையில் பிரதமர் மோடி மேற்கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி, மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளிர் யாத்திரை போன்றவை அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பப்பட்டது.

தனி தேர்தல் அறிக்கை: மேலும், கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை. பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போதிலும், கோவை தொகுதியில் 2-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதிமுக வேட்பாளரால் 3-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இதுகுறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, விலையில்லா பேருந்துப் பயணத் திட்டம் ஆகியவை திமுகவுக்கு கை கொடுத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கியக் காரணம். கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்றன. ஊரகப் பகுதியில் திமுகவுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE