புதுச்சேரியில் பின்தங்கிய பாஜக: ரங்கசாமியின் செல்வாக்கு சரிவா?

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் அரசின் முதல்வர், அமைச்சர்கள் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக பின்தங்கி காங்கிரஸ் முன்னிலை பெற்றது. முதல்வரின் முக்கியத் தொகுதிகளிலும் வாக்குகள் குறைந்ததால் அவரது செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் ரங்கசாமி வென்றத் தொகுதியான தட்டாஞ்சாவடியில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 3403 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் தேனி ஜெயக்குமார் தொகுதியான மங்கலத்தில் பாஜகவை விட காங்கிரஸ் 898 கூடுதல் வாக்குகள் பெற்றது.

அதேபோல் பாஜக வேட்பாளரான அமைச்சர் நமச்சிவாயம் சட்டப்பேரவையில் போட்டியிட்ட தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் பாஜக 595 வாக்குகள் பின்தங்கியது.

ராஜ்பவன் தொகுதியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொகுதியில் 2848 வாக்குகள் கூடுதலாக காங்கிரஸ் பெற்றிருந்தது. காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் திருமுருகன் தேர்வானார். இவர் தொகுதியில் 4149 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.

அதேபோல் அமைச்சர் சாய் சரவணன் குமார் வென்ற ஊசுடு தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. பேரவைத்தலைவர் செல்வத்தின் மணவெளித்தொகுதி தொடங்கி பல்வேறு பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அவர்களின் ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதிகளில் காங்கிரஸே கூடுதலாக வாக்குகளை பெற்றது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். தற்போது மக்களவைத் தேர்தலில் தற்போதைய முதல்வர், அமைச்சர்களின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் செல்வாக்கு சரிவா?: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் முக்கியத்தொகுதி தட்டாஞ்சாவடி. இங்குதான் அதிகளவில் நின்று வென்றுள்ளார். தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியானது கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி என மூன்றாக பிரிக்கப்பட்டது. நீண்டகாலமாக இத்தொகுதியில் முதல்வர் ரங்கசாமியின் கட்சினர்தான் வென்று வருகின்றனர்.

தற்போது மக்களவைத் தேர்தலில் கதிர்காமம், தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. இது ரங்கசாமி தரப்புக்கு வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் இந்திராநகர், ஏனாம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. இதர தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸே முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE