மத்திய சென்னை: வாக்குப்பதிவு இயந்திர பழுது குளறுபடியால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்

By ம.மகாராஜன்

சென்னை: மத்திய சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதி வாக்குகள் எண்ணப்படும் லயோலா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் 6 தொகுதியில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றின் போது வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 12-வது தெருவில் வாக்கு எண்ணும் இயந்திரம் பழுதானதால் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அதேபோல ஆயிரம்விளக்கு தொகுதி 2-வது சுற்று பணி ஆரம்பிக்கும் போது 4-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. அதையும் சீர்செய்யும் பணி நடைபெற்றதால், அதேபோன்று காலதாமதம் ஏற்பட்டது.அதனைத்தொடர்ந்து 3-வது சுற்றில் துறைமுகம் தொகுதியில் 8-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும் வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்றது.

காலை 10 மணிவரை ஒரு சுற்று முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டது.ஒவ்வொரு சுற்று முடிவும் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பெயர்பலகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரே 2-வது சுற்று தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE