முதல் 3 சுற்றிலும் விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலை @ சிதம்பரம்

By பெ.பாரதி

அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், தொடர்ச்சியாக முதல் 3 சுற்றுகளிலும் முன்னிலை பெற்று வருகிறார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 2- வது இடத்திலும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 3-வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி 4-வது இடத்திலும் உள்ளனர்.

சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அரியலூர் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக்கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. செய்தியாளர்கள் அறையில் உள்ள தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளை விசிக வேட்பாளர் திருமாவளவன் பார்வையிட்டார். 3 சுற்று முடிவில், விசிக வேட்பாளர் திருமாவளவன் - 70,330. அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் - 59,566. பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி -23,813 . நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி - 9,594. 3 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட 10,764 வாக்குகள் கூடுதலாக பெற்று விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

சிதம்பரம் (தனி) தொகுதி கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். 2004 மக்களவைத் தேர்தல் வரை இந்த தொகுதி சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில் (தனி), மங்களூர் (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 2008-ல் தொகுதி மறுசீரமைப்பில் மங்களூர் (தற்போது திட்டக்குடி), விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டன. அந்த 3 தொகுதிகளுக்கு மாற்றாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் ஆகிய தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE