சென்னை: மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளர்கள் மற்றும் பிரதான முகவர்கள் கண்காணிப்பு அறைக்கு செல்ல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் நிலையில் சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் மத்திய சென்னை தொகுதியில் அமைந்துள்ள லயோலா கல்லூரியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருகை தரும் ஊழியர்கள், முகவர்கள் அனைவரும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நுழைவு வாயில் முன்பு அதற்கான தனி இடத்தில் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதான முகவர்கள் கண்காணிப்பு அறை முன்பு வருமாறு மத்திய சென்னை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் பொது பார்வை அலுவலர் முன்னிலையில் கண்காணிப்பு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அங்கு அவர்களது முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட உள்ளன.