விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சரத்குமார் அங்கப்பிரதட்சணம்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தார்.

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா போட்டியிட்டார். தேர்தலின்போது வேட்பாளர் ராதிகா மட்டுமின்றி, அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, அவர்கள் விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னரே பிரச்சாரத்தை தொடங்கினர்.

இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாஜக வேட்பாளர் ராதிகாவும், அவரது கணவர் சரத்குமாரும் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலான காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். அவர்களுடன் மகன் ராகுலும் சென்றிருந்தார். அடுத்த மாதம் மகள் வரலட்சுயின் திருமணம் நடைபெற உள்ளதால், திருமண அழைப்பிதழை கோயிலில் வைத்து வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து, இரவு விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு ராதிகாவும், சரத்குமாரும் வந்தனர். அப்போது, கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து சரத்குமார் வழிபட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE