சென்னையில் இரவு நேரத்தில் மின்வெட்டு: தூக்கத்தை தொலைக்கும் மக்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாகப் பல இடங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு அயப்பாக்கம், திருவான்மியூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அயனாவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவுமுழுவதும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``அயனாவரம் பகுதியில் இரவில் பல இடங்களில் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டது.

இதனால், பல மணி நேரம் தூக்கமின்றி தவித்தோம். இப்பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``வெயில் காரணமாக ஏற்பட்ட அதிக வெப்பத்தால் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் உள்ளிட்ட மின் விநியோக சாதனங்கள் பழுதடைவதே இந்த மின்வெட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

அத்துடன், இரவு 10 மணிக்கு பெரும்பாலான வீடுகளில் ஒரே நேரத்தில் ஏசி இயந்திரங்களை இயக்குவதால் மின் பளு ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் மின் விநியோக சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படுகிறது.

எனினும், இவ்வாறு பழுதடையும் இடங்களில் சீரமைப்பு பணிகள்மேற்கொண்டு விரைவாக மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE