கோவை சம்பவம் எதிரொலி: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்

By ப.முரளிதரன்

சென்னை: கோடை விடுமுறையில் மின் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவையில் அண்மையில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் விளையாட சென்ற சிறுவர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோடை விடுமுறையில் மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரியம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோடை விடுமுறையில் உள்ள மாணவர்கள் விளையாடும் போது கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவதை தவிரக்க வேண்டும். அப்படி செல்ல நேரிட்டால், மேலே மின்கம்பி, மின்கம்பம் அருகே செல்லக் கூடாது. பூங்காக்களிலோ அல்லது பொது இடத்திலோ விளையாடும் போது மின்கேபிள், ஒயர், மின்பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ, தொடவோ கூடாது.

மேலும், குழைந்தைகள் விளையாடும் போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து, ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர் அனைவரும் இணைந்து பிள்ளைகளுக்கு மின்சாரத்தின் ஆபத்துக்களை சொல்லித் தர வேண்டும், மின்வாரியமும் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து மின்சார விபத்துக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE