சென்னை கோடம்பாக்கம் சாலையில் 5 அடிக்கு திடீர் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்

By துரை விஜயராஜ்

சென்னை: சென்னை கோடம்பாக்கம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், ஆற்காடு சாலையில் உள்ள கார்ப்பரேஷன் சமுதாய நல மருத்துவமனை முன்பு, சாலையில் தீடீரென 5 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதைப் பார்த்துவிட்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை அப்படியே நிறுத்தினர்.

பின்னர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போக்குவரத்து போலீஸார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்தனர். மேலும், எதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE