உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேருக்கு, சிலர் சிறுநீரக தானம் வழங்க முன்வந்தார்கள். ஆனால், அவர்கள் நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் அல்ல எனக் கூறி, சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அனுமதி குழுவுக்கு, மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பிக்கவில்லை. இதையடுத்து, தங்களின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தானம் பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “மனித உடல் உறுப்புகள் விற்பனையை தடுக்கும் நோக்கில், உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்கள் அல்லாதோர் உறுப்பு தானம் செய்ய இந்தச் சட்டத்தில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதேசமயம், மாநில அளவிலான அனுமதியளிக்கும் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை மருத்துவமனைகள் தான் அனுப்ப வேண்டும் என மாநில அளவிலான குழு வற்புறுத்தக் கூடாது.

தானம் பெறுபவரும், வழங்குபவரும் இணைந்து மாநில அளவிலான குழுவுக்கு விண்ணப்பிக்கலாம். உடல் உறுப்பு தானம் வழங்குவதில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனை இல்லை என்றால், தானத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரிய விண்ணப்பத்தை மாநில அளவிலான குழு நிராகரிக்கக்கூடாது. அதேசமயம் அன்பின் அடிப்படையில் தானம் வழங்குவது தொடர்பாக அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும். உடல் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து, ஒப்புதல் வழங்குவதுடன் மாநில அளவிலான குழுவின் பணிகள் முடிவடைந்து விடவில்லை.

அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க, உறுப்பு தானம் வழங்கியவருக்கு மருத்துவ காப்பீடு செய்வதுடன், மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித் தொகையாக வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE