மதுரை: ஒருவாரமாக வீடுகளை சூழ்ந்துள்ள பாதாள சாக்கடை கழிவுநீரால் வெளியில் நடந்து செல்ல முடியாமலும், சுகாதாரக்கேட்டில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி 63வது வார்டு பாத்திமா நகர் பகுதி மக்கள் இன்று பெத்தானியாபுரம்-காளவாசல் புறவழிச்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி 63வது வார்டு பாத்திமா நகரில் மாதா கோவில் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஒருவாரத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும் சுகாதாரக்கேட்டையும் ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குடியிருப்புகளில் கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அப்பகுதியினர் மதுரை பெத்தானியாபுரம் - காளவாசல் இணைப்பு பாலம் அருகில் புறவழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், “ஒருவாரத்துக்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்கள், குடியிருப்புகளில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. வீட்டைவிட்டு வெளியில் தெருக்கள், வீதிகளில் நடந்த செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீர் சாலைகளை சூழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாகவும், மனுக்களாகவும் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கழிவு நீர் குடிநீரிலும் கலந்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. இதனை சகிக்கமுடியாமலும், இனியாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நோக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டோம்” என்றனர்.
இதனால் போக்குவரத்து பாதித்ததால் சம்பவ இடத்துக்குகு வந்த மாநகர காவல்துறையினர் பெண்கள் மற்றும் பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சூழ்ந்திருக்கும் பாதாள சாக்கடை கழிவு நீர் அகற்றப்படும் என உறுதி அளித்ததால் அப்பகுதி மக்கள் கலந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போக்குவரத்து பாதிப்பு சீரானது.