திருநெல்வேலி: கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் மாடியில் காங்கிரஸ் கட்சியினர் ஏறி நின்று கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் காந்தியடிகள் வேடமிட்டிருந்தார். மாநகர் மாவட்ட துணை தலைவர் எஸ்.எஸ். மாரியப்பன், தச்சநல்லூர் மண்டல தலைவர் ஆர். கெங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.கவிபாண்டியன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.