3 நாட்களாக சென்னையில் அதிக வெப்பம் பதிவாவது ஏன்? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

By ச.கார்த்திகேயன்

சென்னை: இந்த ஆண்டு நாடு முழுவதும் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதில் தமிழகமும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தாலும் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட் வெயில் பதிவாகாமல் இருந்தது.

அதன்பிறகு, கடந்த மே 1-ம் தேதி முதன்முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அளவில் சென்னையில் கடும் வெயில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த திங்கள்கிழமை 105 டிகிரி, செவ்வாய்க்கிழமை 106 டிகிரி, புதன்கிழமை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: ரீமல் புயல் உருவானதால் தமிழகத்துக்கு இயல்பாக காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது ஆந்திர பகுதியில் இருந்து வெப்பமான தரைக்காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது.

இந்தக் காற்று வலுவாக இருப்பதால், ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தினுள் நுழைய முடியவில்லை. அதன் காரணமாக, காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளது. மழை மேகங்களும் உருவாகவில்லை.

மேற்கூறிய காரணங்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் வெப்பம் மாநில அளவில் உச்ச அளவாக பதிவாகி வருகிறது.

அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். கடந்த 3 நாட்களை விட அதிகமாககூட பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் கடந்த 2003-ம் ஆண்டு மே 31-ம் தேதி 113 டிகிரி, 2014-ம் ஆண்டு மே 24-ம் தேதி 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி இருப்பதே உச்சபட்ச அளவாக உள்ளது." என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE