முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கோர்ட் பரிந்துரை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என பலர் மீது குற்றம் சாட்டி சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து தமிழக ஆளுநரும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 16-வது நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அவர் 17-வது நபராக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவி்ட்டிருந்தது.

அதன்படி சிபிஐ புலன் விசாரணை அதிகாரி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விளக்க மனுவில், விஜயபாஸ்கர் 16-வது நபராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து இந்த வழக்கை இன்று விசாரித்த சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், இந்த வழக்கை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்து, விசாரணையை வரும் ஜூன் 19-க்கு தள்ளி வைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE