சென்னை: வீட்டுக்குள் நுழைந்து தாய், மகனை தாக்கிய காவலர்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாய்,.மகனை சிறுவன் மீது தாக்கிய காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த ஆர்.வாசுகி, ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணியளவில் அப்போதைய நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.ராஜசேகரன் (காஞ்சிபுரம்) உள்ளிட்ட 4 போலீஸார், அத்துமீறி என் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் என் வீட்டு சுற்றுச்சுவரை அளவீடு செய்தனர். இதுகுறித்து கேள்வியெழுப்பிய என்னை கீழே தள்ளி, ஷூ காலால் உதைத்தனர்.

இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, புதுப்பாக்கம் கிராமத்தில் சிதம்பரம் என்பவரிடம் நிலம் வாங்குவதில் ஏமாற்றியதாக எனது கணவர் ராஜகோபாலை கைது செய்யவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். எனது கணவர் ஹாலந்தில் பணியாற்றி வருகிறார்.போலீஸார் கூறும் நிலத்துக்கான பணத்தை கொடுத்ததற்கான ஆவணங்களை அவர்களிடம் காண்பித்தேன்.

ஆனால், அவர்கள் என்னை கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கினர். மேலும், எனது 14 வயது சிறுவனை தாக்கி, தந்தை குறித்து கூறாவிட்டால் தேர்வெழுத முடியாது என மிரட்டினர். மேலும், ஒரு நாளில் எனது கணவர் வராவிட்டால் மொத்த குடும்பத்தையும் சிறைபடுத்துவதாகவும் மிரட்டினர். அவர்களின் தாக்குதலுக்காளாகிய நாங்கள் சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்றோம். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு ரூ.1.50 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு இழப்பீடாக வழங்கிவிட்டு, அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE