சென்னை விமான நிலையத்தில் ஆண் பயணி ஆடைகளை கலைத்துவிட்டு ஓடியதால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அமெரிக்கா செல்ல வந்த ஆண் பயணி ஆடைகளைக் கலைத்து நிர்வாணமாக ஓடியதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ஐக்கிய அரபு நாடான அபுதாபி செல்லும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான பெத்தனன் இளங்கோ (47) என்ற பயணி, இந்த விமானத்தில் தனது தந்தையுடன் அபுதாபிவழியாக அமெரிக்கா செல்வதற்காக வந்திருந்தார். அவரும், அவருடைய தந்தையும், குடியுரிமை சோதனைப் பிரிவு நோக்கி நடந்துசென்று கொண்டிருந்தனர். அப்போது, பெத்தனன் இளங்கோ திடீரென்று தனது ஆடைகளைக் கலைந்துவிட்டு நிர்வாணமாக ஓடத் தொடங்கினார்.

இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து மிரட்டி ஆடைகளை அணியச் செய்தனர். அவரின் தந்தையிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது, `தனது மகன் ஏதோ மனஅழுத்தத்தில் இதுபோல் செய்துவிட்டார்' என்று தெரிவித்தார்.

`இது போன்ற செயலில் ஈடுபட்டஇந்த பயணியை எங்களுடைய விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது' எனக்கூறி அவரதுபயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் ரத்து செய்தனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு பயணம் செய்யுமாறு அவரது தந்தையிடம் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவரைமதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE