சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் செயல்பட்டு வந்த கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை என சிறை நிர்வாகம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதியான எஸ்.பக்ரூதின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேன்டீன் திடீரென கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் அடிப்படை உணவு தேவைகளுக்கு சிரமமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.சத்யநாராயண பிரசாத், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். நதியா ஆஜராகி, “கேன்டீன் மூடப்பட்டதால் மனுதாரரைப் போன்ற கைதிகள் தங்களின் உணவு தேவைகளுக்காகவும், அத்தியாவசியப் பொருட்களுக்காகவும் அவதியடைந்து வருகின்றனர். கேன்டீனை திறக்கக்கோரி மனு அளித்தும், அதை சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை” என்றார்.
அப்போது, சிறைத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், அந்தக் கேன்டீன் மூடப்படவில்லை. இருப்பினும் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.