கடற்கரை, பூங்கா செல்வோரை காவல் துறை வெளியேற்ற எதிர்ப்பு: தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்குச் செல்லும் மக்களை துரத்தக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை இரவு 9:30 மணிக்கு மேல் அனுமதிப்பது இல்லை.

காவல் துறையினர் மக்களை அங்கிருந்து துரத்தி விடுகின்றனர்.எனவே கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை பின்னிரவு வரை அனுமதிக்கக் கோரி டிஜிபி மற்றும் மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை மற்றும் பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்தக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE