சென்னை: சென்னை விமான நிலையத்தில் ‘வெடிகுண்டு வெடிக்கும்’ என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒருவாரத்தில் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய இயக்குநர் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் ஞாயிறு நள்ளிரவு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிக்க வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்கின்றனர். இந்த மிரட்டல் தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. ஆனாலும், இமெயிலில் மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.