மதுரை: “காவிரி விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் சகோதரத்துவத்துடன் உள்ளன. ஆகவே, இதில் எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் தீர்க்கப்படும்” என கர்நாடக அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா இன்று (திங்கட்கிழமை) குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கோயிலுக்கு வருகை தந்த கர்நாடக அமைச்சர் முனியப்பாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முனியப்பா, “தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றியடையும். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி கட்சித்தலைவர்கள் ஆதரவுடன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்தியாவில் அரசியலில் இளம் தலைவராக ராகுல்காந்தி உள்ளார். மக்கள் ராகுல்காந்தியை தான் விரும்புகிறார்கள். காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த விஷயத்தில் தமிழகமும் கர்நாடகமும் சகோதரத்துவத்துடன் உள்ளன. ஆகவே, இதில் எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும்” என்றார்.