வங்கதேசம் நோக்கி சென்றது ‘ரீமல்’ தீவிர புயல்; தமிழகத்தில் ஜூன் 1 வரை மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிரபுயல் வங்கதேசம் நோக்கி சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக்கடலில் நிலவிய ரீமல்புயல் நேற்று (மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம்நோக்கி சென்றது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், சென்னையில் வில்லிவாக்கத்தில் 3 செ.மீ., கொளத்தூர், திருவிக நகர், அண்ணா நகரில் 2 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல்முள்ளங்கினாவிளை, அடையாமடை, சிவலோகம், சென்னையில் அயனாவரம், ராயபுரம், பெரம்பூர், மாதவரத்தில் 1 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 86 டிகிரி முதல் 104டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே,இப்பகுதிகளுக்கு மீனவர்கள்செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE