சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது வரை 20கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையப்பணி உள்ளிட்ட பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகின்றன.
போரூர், முகலிவாக்கம், ராமாபுரம், கோவிலம்பாக்கம், மணப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பூந்தமல்லி, ஆலப்பாக்கம், சாஸ்திரி நகர், ரெட்டேரி உள்பட பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. உயர்மட்டப்பாதை பணியை பொருத்தவரை 10 கி.மீ. பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது.
» இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
» வெப்ப அலை காரணமாக மகாராஷ்டிராவின் அகோலாவில் 144 தடை உத்தரவு அமல்
சுரங்கப்பாதை பணியை பொருத்தவரை மாதவரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் மெட்ரோ ரயில் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிக்காக, தற்போது வரை 16-க்கும் மேற்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாதவரம் - தரமணி வழித்தடத்தில் 9.50 கி.மீ., கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் தடத்தில் 0.50 கி.மீ. தொலைவு என மொத்தம் 10 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரண்டாம் மெட்ரோ ரயில்திட்டத்தில் முதலாவது போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் பாதை அமைத்து அடுத்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 2027-ல் அனைத்து உயர்மட்டப்பாதை பணிகளும், 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து சுரங்கப்பாதை பணிகளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.