மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு: கிழக்கு கடற்படை பிரிவு தளபதியிடம் புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: இலங்கை கடற்படையினரால், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவத்துக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெண்டார்கரிடம், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெண்டார்கர்‌ சனிக்கிழமை சட்டப் பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமி கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதிக்கு சால்வை அணிவித்து அவரை வரவேற்றதுடன் திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். இதேபோல், லைட்ஹவுஸ் மாதிரியை முதல்வருக்கு, கடற்படைப் பிரிவுத் தளபதி நினைவுப்பரிசாக அளித்தார்.

அப்போது, ‘காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்த கல்வியை, விழிப்புணர்வை புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கடற்படையின் மூலமாக கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தியக் கடற்படை தினத்தை புதுச்சேரியில் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’, என்றும் முதல்வர் ரங்கசாமி இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவு தளபதியைக் கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE