வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நாளை (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (24.05.2024) காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச - கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு - தென்மேற்கேயும் மற்றும் மேற்கு வங்காள - கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக நாளை இரவு வலுப்பெற்று, 26.05.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையை கடக்க கூடும். இதனிடையே, தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (மே 24) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 25) முதல் 30.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று (மே 24) முதல் 28.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள்: இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE