கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி பலி: பூங்காவில் விளையாடிய போது சோகம்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகம் உள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இப்பூங்காவுக்கு இதே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜீயானஸ் ரெட்டி (4) வைபோக பிரியா என்ற வியோமா (8) ஆகியோர் நேற்று (மே 23) மாலை விளையாடச் சென்றனர்.

அங்குள்ள சறுக்கி விளையாடும் உபகரணம் அருகே சென்றபோது திடீரென இருவரும் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்த அவர்களது பெற்றோர், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறார்கள் இருவரும் வரும் வழியிலே உயிரிழந்தது தெரிய வந்தது.

பூங்கா வளாகத்தில் உள்ள மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அங்கிருந்த உபகரணத்தில் மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE