“போராட்ட தேதியை முன்பே அறிவித்தால் உணவு ஏற்பாடு” - செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதில்

By துரை விஜயராஜ்

சென்னை: ‘பாஜக அலுவலக முற்றுகை போராட்ட தேதியை முன்பே அறிவித்தால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்’ என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழர்களை இழிவாக பேசியுள்ளதாகவும், ஒரு வாரக் காலத்துக்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதில் அளித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

‘தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்.

எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’, என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE