நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 84 மிமீ., மழை பதிவானது. பேச்சிப்பாறையில் இருந்து புதன்கிழமை மாலை 500 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 33.2, பெருஞ்சாணி 23.8, சிற்றார் 1-.24.2, சிற்றார்2-26.8, கன்னிமார் 14.2, கொட்டாரம் 84.6, மயிலாடி 58.4, நாகர்கோவில் 45, பூதப்பாண்டி 20, முக்கடல் 15.8, பாலமோர் 30.2, தக்கலை 44.4, குளச்சல் 75.2, இரணியல் 55.2, அடையாமடை 37.2, குருந்தன் கோடு 61.4, கோழிப்போர்விளை 46.2, மாம்பழத்துறையாறு 35, களியல் 37.4, குழித்துறை 52.2, சுருளோடு 21.6, ஆணைக்கிடங்கு 31.6, திற்பரப்பு 29.6, முள்ளங்கிணாவிளை 42.6.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.10 அடியாக இருந்தது. அணைக்கு 766 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 636 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பேச்சிப்பாறையில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இவை தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்தார்.