காவல் நிலையத்தில் மனித உரிமை மீறல்: உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர்களையே தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

மதுரை, அனுப்பானடியை சேர்ந்த வி.சம்பத்குமார், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், “என் சகோதரி கணவர் பால்ராஜ், என் பாட்டி காமாட்சி அம்மாளிடம் தொடர்ச்சியாக தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். ஆனால், காவல் நிலையத்துக்கும், உதவி ஆய்வாளர் சி.சக்தி மணிகண்டனின் வீட்டுக்கும் பால்ராஜ் சம்பளம் பெறாமல் வேலை செய்வதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி எனது பாட்டியை பால்ராஜ் தாக்கினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் ஆணையரிடம் புகார் அளிப்போம் என எனது சகோதரர் உள்ளிட்டோர் காவல்நிலையம் சென்று வலியுறுத்தி வந்தோம். அன்றைய தினம் இரவு எங்கள் வீட்டுக்கு வந்த உதவி ஆய்வாளர் சக்தி மணிகண்டன் எனது சட்டையைப் பிடித்து இழுத்து அவதூறாக பேசி என்னையும் சகோதரரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு லத்தி போன்றவற்றை வைத்து கை, கண்கள் போன்ற உறுப்புகளில் கடுமையாக தாக்கி, வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், என் பாட்டியிடம் ரூ.4,500 பணத்தையும் எனது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றையும் வாங்கிவைத்துக் கொண்டு, பால்ராஜ் மீது இனியும் புகாராளித்தால் பொய் வழக்கு பதிந்து எதிர்காலமே இல்லாமல் செய்துவிடுவதாகவும், சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது எனவும் மிரட்டியும் அனுப்பினர்.

ஆனால் வலி தாங்காத நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி நாங்கள் சிகிச்சை பெற்ற போது அங்கு வந்த காவலர் ஒருவர் எங்களை வீட்டுக்கு செல்லும்படி மிரட்டினார். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன், “ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை வைத்துப் பார்க்குபோது உதவி ஆய்வாளர் மனுதாரரை தாக்கியது உறுதியாகிறது. எனவே, மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள்ளாக ரூ.50 ஆயிரத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கிவிட்டு அந்தத் தொகையை உதவி ஆய்வாளர் சக்தி மணிகண்டனிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE