பிக் அப் வாகனத்தில் ஊட்டி சுற்றுலா: விபத்தில் சிக்கிய ஆந்திர சுற்றுலா பயணிகள்

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: மாற்றியமைக்கப்பட்ட பிக் அப் வாகனத்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த ஆந்திரா பயணிகள் விபத்தில் சிக்கினர். மாற்றியமைக்கப்பட்ட 3 பிக் அப் வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், பல்நாடு பகுதியைச் சேர்ந்த 50 - க்கும் மேற்பட்டோர் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக குறைந்த வாடகையில் வாகனத்தை தேர்வு செய்துள்ளனர். மஹிந்திரா பிக் அப் வாகனத்தை 20 பேருக்கும் மேல் பயணிக்கும் வகையில் மாற்றம் செய்து 3 வாகனங்களில் 50 - க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஊட்டியை சுற்றிப்பார்த்து விட்டு குன்னூர் சென்றுள்ளனர். சிம்ஸ் பூங்காவில் இருந்து பவானி கூடுதுறை செல்வதற்காக கோத்தகிரி பாதையில் நேற்று பயணித்துள்ளனர். 3 பிக் அப் வாகனங்களில் இவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், குன்னூர் அருகில் உள்ள பெட்டட்டி பகுதியில் சென்றபோது ஒரு பிக் அப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த வாகனத்தில் இருந்து கொத்துக் கொத்தாக பயணிகள் விழுவதைக் கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அனைவருமே காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து வெலிங்டன் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் விளக்கிய போலீஸார், “சரக்கு ஏற்றப் பயன்படுத்தப்படும் பிக் அப் வாகனத்தின் பின்பகுதியை இரண்டு பிரிவாக பிரித்து மாற்றம் செய்துள்ளனர். அதில் மேல் அடுக்கிலும் ஆட்களை அமர வைத்துள்ளனர். வளைவில் வாகனம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. வண்டியை நிறுத்த ஓட்டுநர் முயற்சித்தும் பயனின்றி பள்ளத்தில் பாய்ந்திருக்கிறது.

லேசான காயத்துடன் தப்பியவர்களுக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையில், பலத்த காயமடைந்தவர்களுக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றம் செய்த 3 பிக் அப் வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இது தொடர்பாக ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE