மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்; வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முதல்வருக்கு சத்திரிய நாடார் இயக்கம் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த மனுவின் விவரம்: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ம் தேதியன்றே கடத்தப்பட்டுள்ளார்.

4-ம் தேதி வாயில் சில பொருட்கள் திணிக்கப்பட்டு, கடப்பா கல்லில் கட்டி வைத்து டீசல் ஊற்றி தீயிட்டு எரிக்கப்பட்ட அவரது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு மேலாகியும் காவல்துறையால் யாரும் கைது செய்யப்படவில்லை.

கொலையாளி அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருந்தால் கொலையாளிகள் காவல்துறையால் எப்பொழுதோ அடையாளம் காட்டப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பார்களோ என்று எங்கள் சமுதாயம் கருதுகிறது.

ஜெயக்குமார் இறப்பின் முதல் தகவல் அறிக்கையும், பிரேத பரிசோதனை அறிக்கையும் நடந்தது கொலைதான் என்று உறுதிபடுத்தும் நிலையில், காவல் துறையின் பல கோண விசாரணைகளும், உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இருந்து மாறுபட்டு இது கொலை அல்ல தற்கொலை என்று விசாரணையின் தீர்ப்பு வந்துவிடுமோ என எங்கள் சமுதாயம் அச்சப்படுகிறது.

எனவே இதில் தலையிட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட வேண்டும். அல்லது சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE