தேனிக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கரிடம் போலீஸார் விசாரணை @ கஞ்சா வழக்கு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: போலீஸ் விசாரணைக்காக மதுரை நீதிமன்றத்தில் இருந்து சவுக்கு சங்கர் திங்கள்கிழமை மாலை தேனிக்கு அழைத்து வரப்பட்டார்.

சவுக்கு மீடியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். இவர் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த கடந்த 4-ம் தேதி தேனியில் கோவை போலீஸார் கைது செய்தனர். மேலும் இவருடன் தங்கியிருந்த ராஜரத்தினம், ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று முதல் 2 நாட்கள் காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை மாலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். இவருக்கு கஞ்சா விற்றதாக பரமக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் அழைத்து வரப்பட்டார். ஆய்வாளர் உதயகுமார் விசாரணையைத் தொடங்கினார். விசாரணை முடிந்து புதன்கிழமை மாலை 3 மணிக்கு சவுக்கு சங்கரை போலீஸார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE