சிங்கப்பூரில் பரவும் கரோனா - தமிழக மக்கள் அச்சமடைய வேண்டாம் என அரசு தகவல்

By சி.கண்ணன்

சென்னை: சிங்கப்பூரில் பரவும் கரோனா தொற்றால் தமிழக மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் தற்போது 14 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சனிக்கிழமை சென்னையில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஒரே வாரத்தில், 26,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை முககவசம் அணியும்படி, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்துக்கும், சிங்கப்பூருக்கும் நேரடி விமான போக்குவரத்து சேவை இருப்பதால் கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் இருந்து அந்நாட்டுக்கு சென்று வருகின்றனர். சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்குமா என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “சிங்கப்பூரில் கேபி 2 வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது. இது ஒமைக்ரான் வகையை சேர்ந்த வைரஸ் தொற்று ஆகும். இந்த வகை தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும், தீவிர பாதிப்பு இல்லை. அதனால், சிங்கப்பூரில் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவல் குறித்து மக்கள் அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம். பொது இடங்களுக்குச் செல்பவர்கள் முகக்கவசம் அணிவதையும், அவ்வப்போது கைகளை தண்ணீரால் சுத்தம் செய்வதையும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE