ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த உத்தரவு ரத்து

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் ரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

தெற்கு மத்திய ரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய கவுரிதனயன், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது மகனை கவனிக்க வேண்டும் எனக் கூறி, தெற்கு ரயில்வேக்கு இடமாற்றம் கோரியுள்ளார். அதன்படி இடமாற்றம் வழங்கப்பட்ட கவுரிதனயன் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அரக்கோணத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை இடமாற்றம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

மகனை கவனித்துக்கொள்வதற்காக ஓய்வு பெறும் வரை அரக்கோணத்திலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், தனது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கவுரிதனயன் சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் சுவாமிநாதன், ‘மாற்றுத் திறனாளிகளை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய தொழிலாளர்களுக்கு இடமாறுதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பணியாளர் நலத்துறை அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது’ எனக் கூறி மனுதாரரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE